தகவல் மற்றும் தொலைத்தொடர்புக்கான மின்னணு சாதனங்கள் (ஐசிடி) சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா வரி விதிப்பதற்கு எதிரான வழக்கில், சச்சரவுகளை தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும் என உலக வர்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஓ) அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா வரி விதித்து வருகிறது. இது, சர்வதேச வர்த்ததக விதிமுறைகளை மீறும் செயல் என அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும், உலக வர்த்தக அமைப்புக்கும் இடையில் சர்ச்சைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க டபிள்யூடிஓ-விடம் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐசிடி தயாரிப்புகளுக்கு இந்தியா வரி விதிப்பது தொடர்பான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருநாடுகளுக்கிடையிலும் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆலோசனை நடைபெற்றது. துரதிருஷ்டவசமாக, இந்த ஆலோசனையில், பிரச்னைகளுக்கு தீர்வு எதையும் எட்டமுடியவில்லை.
எனவே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என டபிள்யூடிஓ-விடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐசிடி தயாரிப்புகளின் இறக்குமதிக்கு இந்தியா வரி விதிப்பதற்கு, அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பிய யூனியன், சிங்கப்பூர், சீனா, கனடா, தைவான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.