புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு,பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 16-ஆம் தேதியன்று தன்னுடைய 74-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அதையடுத்து ப.சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் , 'உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தொடங்கிக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் தற்போது சிதம்பரத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை சிதம்பரத்தின் குடும்பத்தார் அவர் சார்பில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி.
பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?
தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.