பாரமுல்லா மாவட்டத்தில் பட்டன் பகுதிக்கு அருகே எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) வாகனத்தை மர்ம கும்பல் வியாழக்கிழமை தீ வைத்து எரித்தது. இதுகுறித்து பி.எஸ்.எஃப் அதிகாரிகள் கூறியதாவது,
பாரமுல்லா-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து டன் எடை கொண்ட 2 கனரக பிஎஸ்எஃப் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன, அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கார் ஓட்டுநர், பி.எஸ்.எஃப் வீரர்களுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். அப்போது உள்ளூர் மக்களும் அதிகளவில் திரண்டனர்.
அப்போது பி.எஸ்.எஃப் வாகனம் ஓட்டுநர் வேண்டுமென்றே வேகமாக ஓட்டியதாகக் கூறி அங்கிருந்த மர்ம கும்பல் அந்த வாகனத்தை தீயிட்டு எரித்தனர். இச்செயல் காரணமாக பி.எஸ்.எஃப் வாகனத்தின் ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.