எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் நிரபராதியாக கருதப்படுவார் என்று தப்பியோடிய பணமோசடி குற்றவாளி மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.
மெஹுல் சோக்ஸி தனது முறையீடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்ட பின்னர் ஒப்படைக்கப்படுவார் என்று ஆன்டிகுவா மற்றும் பார்பேடாஸ் முதல்வர் காஸ்டன் பிரவுன் கூறினார். இதையடுத்து மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார். அதில்,
மெஹுல் சோக்ஸி சட்டத்தை மதிக்கும் குடிமகன். அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நிலுவையில் இல்லை. அவர் சட்டத்தில் உள்ள பல்வேறு தீர்வுகளை பயன்படுத்தி வருகிறார்.
கடுமையான உடல்நிலைக் காரணமாக அவரால் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. ஆன்டிகுவா சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய சட்ட ரீதியான தீர்வுகளையும் பெற்றுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதப்படுகிறார். அதுவரை குற்றம்சாட்டப்பட்டவரால் அனைத்து சட்ட ரீதியான தீர்வுகளையும் பெற உரிமை உண்டு. சரியான நேரத்தில் சோக்ஸி தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று தெரிவித்தார்.