மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்துவரும் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பு இனத்திற்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இளையமகன் தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே, தேஜஸ் தாக்கரே என்று இரு மகன்கள் உள்ளனர். ஆதித்யா தாக்கரே கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்துவரும் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பு இனத்திற்கு, தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தேஜஸ் தாக்கரே கடந்த 2015-ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பினம் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்த ஆய்வு அறிக்கையை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆய்வு நடத்தி பூனை பாம்பு இனம் இருப்பதை உறுதி செய்தனர். இந்த பாம்பு மரத்தவளை மற்றும் அதன் முட்டைகளை தின்னும் அரியவகை உயிரினம் ஆகும். இதன் மேல் பகுதியில் புலி போன்ற வரிகள் இருக்கும். இந்த பாம்பு இனத்துக்கு ‘‘தாக்கரேஸ் பூனை பாம்பு'' என பெயரிட்டு உள்ளனர்.
அதாவது தேஜஸ் தாக்கரே இந்த பாம்பினத்தை கண்டுபிடித்ததற்காக அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாம்பின் அறிவியல் பெயர் ‘போய்கா தாக்கரேயி' ஆகும். இரவு நேரத்தில் மட்டுமே தனது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்து இரை தேடக்கூடிய இந்த பாம்பு, விஷம் அற்றவை என்று அறியப்பட்டுள்ளது.