ஒடிஸாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
இதுதொடர்பாக, மல்கான்கிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் கிலாரி கூறியதாவது:
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆந்திர-ஒடிஸா எல்லை மண்டலக் குழுவைச் சேர்ந்த துலா மத்காமி என்பவர், எனது முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
கடந்த 2015-இல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவரான மத்காமிக்கு, மல்கான்கிரி மற்றும் கோராபுட் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்து, காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்தச் சூழலில், வன்முறையைக் கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்புவதாக கூறி, அவர் சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆந்திர-ஒடிஸா மண்டலக் குழுவின் முக்கிய தலைவர்களை பாதுகாக்கும் குழுவில் மத்காமி இருந்துள்ளார்.
மல்கான்கிரி பகுதியில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளால் கவரப்பட்டு, தாம் அமைதிப் பாதைக்கு திரும்பியதாக அவர் கூறியுள்ளார். அவரது மறுவாழ்வுக்குத் தேவையான நிதியுதவி, மாநில அரசின் திட்டத்தின்படி வழங்கப்படும். அவர் வீடு கட்டிக் கொள்ளவும், கல்வி பயிலவும் நிதியுதவி அளிக்கப்படும் என்றார் ரிஷிகேஷ் கிலாரி.