மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணா நதியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரத்தில் அந்த அணை மீது கட்டப்பட்டுள்ள முக்கிய அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திரத்தில் ஓடும் கிருஷ்ணா நதி அதன் பின் வங்கக் கடலில் கலக்கிறது.
கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் உள்ள அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் அந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ள முக்கிய அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு, பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீசைலம் அணைக்கு 2.73 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 3.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல், நாகார்ஜுன சாகர் அணைக்கு 2.91 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2.78 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணைக்கு 2.58 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அந்த அணையில் இருந்து 2.23 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. "வெள்ளச் சூழல் அதிகரித்து வருவகிறது. எனினும், வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கும் அபாயம் இல்லை' என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.