உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் பெருமையை உணராததற்காக வெட்கப்படுகிறேன் என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டத்தில், பேசிய பிரதமர் மோடி, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் கூற்றை மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும் உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் மாநிலத்தில், நாம் தற்போது இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஐ.நாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று குறிப்பிட்டார். அதுவரை தமிழ் பழமையான மொழி என்று நான் உணரவில்லை. தமிழ் மொழியின் பெருமையை உணராமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும்.
நான் ஊட்டியில் ஒரு உறைவிடப் பள்ளியில் படித்தேன். அங்கு நான் தமிழைப் படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் ஒரு சில தேர்வு வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன். இது தமிழ் பேசும் எனது குழுவின் உறுப்பினர்களை வெட்கப்பட வைக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.