தில்லியில் புதன்கிழமை காலை வரை 120 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுதொடர்பாக தெரிவித்ததாவது:
"இன்று காலை வரை 120 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா காரணமாக தில்லியில் 766 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 112 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவர்களுக்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.
112 பேரில் ஒருவர் மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். இருவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி 109 பேரின் உடல்நிலை சீராகவே உள்ளது.
தில்லி மாநாட்டில் இருந்து மொத்தம் 2,346 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 536 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,810 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தில்லியில் சுமார் 10 லட்சம் ஏழைகளிடம் ரேஷன் அட்டை இல்லை. அவர்களை இணையதளம் மூலம் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ரேஷன் அட்டை வராது. ஆனால், கரோனா விவகாரம் தொடரும் வரை அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்" என்றார்.