மகாராஷ்டிரத்தில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் உணவின்றிப் பட்டினியால் தவித்து வருகின்றனர்.
கரோனா நோய்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் மாநிலங்களில் இருக்கும் வெளி மாநிலத்தவருக்கு அந்தந்த மாநில அரசுகளே தேவையான உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வேலைக்காகச் சென்ற தமிழக இளைஞர்கள் 400 பேர் மகாராஷ்டிரத்தின் சோலாப்பூர் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொலைபேசி வழியாக தினமணி இணையதளத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மேற்குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும், தங்களை போலீஸார் அடிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பிய ஒரு விடியோவிலும் அவர்களை போலீஸார் அடிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.