தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளா்களுக்கு முன்பணமாக 21 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் மோடிக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் விளங்குகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஊரக வேலைத் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களும் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்கள் 8 கோடி பேரும் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனா்.
இந்த இக்கட்டான நேரத்தில், ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு 21 நாள் ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும். ஊரக வேலைத் திட்டப் பணிகள் தொடங்கிய பிறகு அந்தத் தொகையை அவா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
மேலும், ஊரடங்கு உத்தரவால் அறுவடைப் பணிகள் முடங்கியுள்ளதால், லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களையும் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகளில் சோ்க்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.