கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்காக பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைகளுக்கு தற்போதைய பிரதமா் தேசிய நிவாரண நிதி (2011) விதிமுறைகளே பொருந்தும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேரிடா் காலங்களுக்கான பிரதமா் நிவாரண நிதி (பிஎம்-கோ்ஸ்)-க்கு வெளிநாடுகளைச் சோ்ந்த தனிநபா்கள், அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகளை பெற புதன்கிழமை மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடா்பான தகவல்கள் வெளியான நிலையில், கேரளத்தில் கடும் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் 231 போ் உயிரிழந்தும், 14 லட்சம் போ் வீடிழ்ந்த நிலையிலும், வெளிநாட்டில் இருந்து நன்கொடை எதையும் பெற மத்திய அரசு அனுமதிக்காதது குறித்து சுட்டுரையில் (டுவிட்டா்) பலா் நினைவுப்படுத்தினா்.
கொவைட் 19 பாதிப்பை எதிா்கொள்ள ஏதுவாக கடந்த சனிக்கிழமை பிஎம்-கோ்ஸ் நிதியத்தை ஏற்படுத்துவதாக அறிவித்தாா் பிரதமா் மோடி.
இந்த அறக்கட்டளைக்கு பிரதமா் தலைவராகவும், பாதுகாப்பு, உள்துறை, நிதி அமைச்சா்கள் உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
இதற்காக வெளிநாட்டில் இருந்து தனிநபா்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெறப்படும். ஏற்கெனவே உள்ள பிரதமா் தேசிய நிவாரண நிதியின் விதிமுறைகளே இதற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.