பனாஜி: கரோனா காரணமாக இல்லத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க ‘கொவைட் லொகேட்டர்’ என்னும் செயலியை கோவா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3588 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 99 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடுழுவதும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களை இல்லத் தனிமையில் வைத்துக் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இல்லத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க ‘கொவைட் லொகேட்டர்’ என்னும் செயலியை கோவா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கோவா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாநிலம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ள ஆனால் அறிகுறிகள் இல்லாதவர்கள இல்லத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு இருப்பவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் செல்லாதவாறு கண்காணிக்க, ஜிபிஎஸ் அடிப்படையில் செயல்படும் இந்த செயலி உதவுகிறது. இந்த செயலியானது ஆண்ட்ராயிட் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.