கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்ததினார்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,374 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் தொடா்ந்து இயங்கி வருகின்றன.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று குடியரசு முன்னாள் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவெகௌவுடா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன்படி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கரோனா தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.