அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாட இருக்கிறாா்.
நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து, அதைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அவரது இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய ஊரடங்குக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாட இருப்பது இது முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமாக 5-க்கும் அதிகமான எம்.பி.க்களைக் கொண்டுள்ள கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவா்களுடன் வரும் 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
அந்தக் கலந்துரையாடலின்போது கரோனா சூழல் மற்றும் தேசிய ஊரடங்கு உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.