உத்தரப் பிரதேசத்தில் குழந்தை உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் குழந்தை உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புக்குள்ளான 16 பேரில் 5 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மருத்துவர் சுதீர் சிங் தெரிவித்துள்ளார். இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 336ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 4,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 114 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் வைரஸ் பாதிப்பிலிருந்து 325 பேர் குணமடைந்துள்ளனர்.