மத்தியப் பிரதேச போலீஸார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கு காப்பீட்டுத் தொகை குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடும் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் மாநில காவல்துறை மற்றும் வருவாய், நகர நிர்வாகம் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போபாலில் ஐந்து சுகாதாரத்துறை ஊழியர்கள், ஏழு போலீஸார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, முதல்வர் சௌகான் மற்றும் மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் ஆகியோர் தங்களது ஊதியத்தில் 30 சதவீதத்தை நிவாரண நிதிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.