புது தில்லி: கரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு எவ்வாறெல்லாம் திரட்டலாம் என்பது குறித்து ஐந்து யோசனைகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா எழுதியுள்ளார்.
கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் 30% பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வேறு எந்த வகைகளில் எல்லாம் மத்திய அரசு நிதி திரட்டலாம் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சோனியா காந்தி, மேலும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து நிதியையும், பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் கொண்டு வந்து, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி எப்போதும் கைவசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் இணையதளம் மூலம் கொடுக்கும் அனைத்து விளம்பரங்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
மத்திய அரசு நாட்டின் முக்கியப் பகுதிகளை அழகுபடுத்துதல் மற்றும் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கும் ரூ.20 ஆயிரம் கோடியை நிறுத்தி வைக்க வேண்டும்.
தற்போது நாடாளுமன்றம் இயங்கும் பழைய கட்டடத்திலேயே அது இயங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் நான் கருதுகிறேன் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.