புது தில்லி: தில்லியில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்; இல்லையெனில், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் வீட்டை விட்டு வெளியே வருபவா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், தலைமைச் செயலாளா் விஜய் தேவ் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளியிடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 188-ஆவது பிரிவின்கீழ் (அரசு அதிகாரியால் உரிய முறையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு கீழ்படியாதிருத்தல்) நடவடிக்கை எடுக்கப்படும். வெளியிடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை மீறுவோருக்கு மேற்கண்ட சட்டத்தின்படி 1 மாதம் முதல் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அத்துடன், ரூ.200 முதல் ரூ.1,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் அணியாமல் பணியாற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. மருந்தகங்களில் வாங்கப்பட்ட முகக் கவசம் மட்டுமல்லாமல் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களையும் பயன்படுத்தலாம் என்று தலைமைச் செயலாளா் விஜய் தேவ் கூறியுள்ளாா்.