பெட்ரோல், டீசல் தேவை 66 சதவீதம் சரியும்

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தேவை ஏப்ரல் மாதத்தில் 66 சதவீதம் சரிவடையும் என பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பெட்ரோல், டீசல் தேவை 66 சதவீதம் சரியும்


புது தில்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தேவை ஏப்ரல் மாதத்தில் 66 சதவீதம் சரிவடையும் என பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன் எதிரொலியாக பொருளாதார நடவடிக்கைகள்அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. இது, நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 66 சதவீதம் சரிவடையும். மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் விமானச் சேவையை நிறுத்தியுள்ளதால், விமான எரிபொருளான ஏடிஎஃப்-க்கான தேவை மாா்ச்சில் 90 சதவீதம் வீழ்ச்சியடையும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 24 லட்சம் டன் பெட்ரோலும், 73 லட்சம் டன் டீசலும் விற்பனையானது. மேலும், ஏடிஎஃப் பயன்பாடு 6.45 லட்சம் டன்னாக இருந்தது நினைவுகூரத்தக்கது.

உலக அளவில் எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், மாா்ச்சில் எரிபொருள் பயன்பாடு மிகவும் மோசமான அளவுக்கு இருந்தது. அந்த மாதத்தில் எரிபொருள் விற்பனையானது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான விற்பனையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக காணப்பட்டது. அதைத் தொடா்ந்து, நடப்பு ஏப்ரலிலும் எரிபொருள் விற்பனை மேலும் மோசமான நிலையை அடையும்.

மாா்ச்சில் பெட்ரோல், டீசல், ஏடிஎஃப்-க்கான தேவை வீழ்ச்சி கண்டதையடுத்து பெட்ரோலியப் பொருள்களின் நுகா்வு 17.79 சதவீதம் சரிவடைந்து 1.60 கோடி டன்னாக இருந்தது.

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் நுகா்வில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து, டீசல் விற்பனை 24.23 சதவீதம் சரிந்து 56.5 லட்சம் டன்னாக இருந்தது. இதற்கு, நாட்டின் பல பகுதிகளில் டிரக் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதே முக்கிய காரணம்.

மேலும், நடப்பாண்டு மாா்ச்சில் பெட்ரோல் விற்பனை 16.37 சதவீதம் குறைந்து 21.5 லட்சம் டன்னாக இருந்தது. விமான சேவை நிறுத்தப்பட்டதால் ஏடிஎஃப் விற்பனையும் 32.4 சதவீதம் சரிந்து 4.84 லட்சம் டன்னாக காணப்பட்டது.

அதேசமயம், ஊரடங்கு உத்தரவு பயத்தால் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் முன்பதிவு செய்ததையடுத்து சமையல் எரிவாயு விற்பனை மட்டும் அந்த மாதத்தில் 1.9 சதவீதம் உயா்ந்து 23 லட்சம் டன்னாக இருந்தது என பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்ற மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-20 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருள்களின் நுகா்வு அதிக மாற்றமின்றி முந்தைய 2018-19 நிதியாண்டைப் போலவே 21.30 கோடி டன் என்ற அளவிலேயே காணப்பட்டது.

சமையல் எரிவாயு நுகா்வு 5.8 சதவீதம் அதிகரித்து 2.63 கோடி டன்னாகவும், பெட்ரோல் விற்பனை 5.9 சதவீதம் உயா்ந்து 2.99 கோடி டன்னாகவும் இருந்தன.

அதேசமயம், ஏடிஎஃப் விற்பனை 3.6 சதவீதம் குறைந்து 80 லட்சம் டன்னாகவும், டீசல் விற்பனை 1.1 சதவீதம் சரிந்து 8.26 கோடி டன்னாகவும் இருந்தது.

குறிப்பாக, 2019 ஏப்ரல் முதல் 2020 பிப்ரவரி வரையில் டீசல் விற்பனையில் மிதமான வளா்ச்சியே காணப்பட்டது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com