21 நாள் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் இந்திய ரயில்வே ரூ. 7.54 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த ஊரடங்கை மேலும் 19 நாள்களுக்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதன் காரணமாக மே 3-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை மற்றும் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை ரயில் முன்பதிவு ஆகியவற்றை இந்திய ரயில்வே ரத்து செய்தது.
எனினும், அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் இந்திய ரயில்வே ரூ. 7.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் இதுதொடர்பாக தெரிவித்ததாவது:
அத்தியாவசியப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது. இதன்படி 65 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஏப்ரல் 14 மாலை 6 மணி வரை 77 ரயில்கள் இயக்கப்பட்டன. 1,835 டன் பொருள்கள் கொண்டு சேர்க்கப்பட்டதன் மூலம், இந்திய ரயில்வே ஒருநாளைக்கு ரூ. 63 லட்சம் வருவாய் ஈட்டியது.