புது தில்லி: ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு கட்டணங்களைப் பயணிகள் கோரினால், அதைத் திரும்ப வழங்க வேண்டுமென்று விமான சேவை நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதையடுத்து, ஊரடங்கு நிறைவடையும் வரை உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான கட்டணங்கள் திரும்ப வழங்கப்படாது என்று விமான நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
அதற்குப் பதிலாக ஊரடங்கு நிறைவடைந்த பிறகு வேறொரு நாளில் பயணிக்கும் வகையில் பயணச்சீட்டை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவை கூறியிருந்தன. எனினும், பயணச்சீட்டுக்கான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டுமென்று பயணிகள் பலா் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக விமான நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடன் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.
இது தொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதம் 3-ஆம் தேதி வரை விமானங்களில் பயணம் செய்வதற்காக மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பயணச்சீட்டை முன்பதிவு செய்தவா்கள், அதற்கான கட்டணத்தைத் திரும்பக் கோரினால், விமான நிறுவனங்கள் அதை வழங்க வேண்டும். பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் எதுவும் விதிக்காமல், மொத்த கட்டணத்தையும் நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும்.
பயணிகள் கட்டணத்தைக் கோரியதிலிருந்து 3 வாரங்களுக்குள் மொத்த தொகையும் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.