ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் குறித்த தரவு மேம்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
தில்லி ராஜிவ் காந்தி பன்னோக்கு மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஞாயிற்றுக்கிழமை சென்று கரோனா பரிசோதனைகளை பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் குறித்த தரவு மேம்பட்டு வருகிறது. ராஜிவ் காந்தி பன்னோக்கு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 177 பேரில் சுமார் 95 நோயாளிகள் குணமடைந்த நிலையில் இன்று மாலை அவர்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள். மருத்துவமனையில் சுமார் 12-13 நோயாளிகள் ஐ.சி.யுவில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 14 நாட்களில் நோயாளிகளின் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்கள். கடந்த 7 நாட்களில் அது 7.2 நாட்களாக மாறியது. கடந்த 3 நாட்களில் நோயாளிகளின் இரட்டிப்பு விகிதம் 9.7 நாட்களாக மாறியுள்ளது. இது நல்ல முன்னேற்றம்' என்று தெரிவித்தார்.