சத்தீஸ்கரில் பெண் நக்ஸல் சுட்டுக்கொலை; வீரர்கள் இருவருக்கு படுகாயம்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்ஸல்கள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசா்வ் படையினா், சத்தீஸ்கர் ஆயுதப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினா் இணைந்து நக்ஸல்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர்.
பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், மாவட்ட ரிசா்வ் படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நக்ஸல் பெண் என்றும் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாராயண்பூர் எஸ்.பி. மோஹித் கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.