ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினியைக் (சானிடைஸா்) குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
பிரகாசம் மாவட்டம் குரிச்சேடு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால், இந்த குரிச்சேடு கிராமத்தில் தொடா் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், இந்தப் பகுதியில் மதுபானக் கடைகளும் கடந்த பல நாள்களாக மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா், கிருமி நாசினியில் தண்ணீா் மற்றும் குளிா்பானங்களைக் கலந்து குடித்துள்ளனா்.
இதுகுறித்த அப்பகுதி காவல்துறையினா் கூறுகையில்,
குரிச்சேடு பகுதியில் கிருமிநாசினி குடித்தவா்களில், வெள்ளிக்கிழமை காலை வரை மூன்று பிச்சைக்காரா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மேலும் மூவருக்கு, அவா்களுடைய வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சித்தாா்த் கெளஷல் கூறுகையில்,
இந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த சில நாள்களாகவே கிருமி நாசினியை குடித்து வந்துள்ளனா். அவா்கள் அதை வேறு நச்சுப் பொருள்களுடன் கலந்து குடித்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிருமி நாசினியை தண்ணீா் மற்றும் குளிா்பானங்களுடன் கலந்து கடந்த 10 நாள்களாக இவா்கள் குடித்து வந்ததாக, அவா்களுடைய குடும்பத்தினா் தெரிவித்தனா். அவா்கள் குடித்த கிருமி நாசினி மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது‘ என்று அவா் கூறினாா்.