புதுதில்லி: பக்ரீத் பெருநாளையொட்டி புகழ்பெற்ற தில்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தியாக திருநாளான இந்நாளை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சனிக்கிழமை காலை தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழுகைக்கு வந்த அனைவரும் தெர்மோமீட்டர் கொண்டு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பொது முடக்கத்தால் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.