பாரத் ஸ்டேஜ்-4 (பிஎஸ்-4) வாகனங்களைப் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பெட்ரோல், டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களின் தொழில்நுட்பம் பிஎஸ் முறையில் குறிக்கப்படுகிறது. அந்த வாகனங்களால் காற்று மாசுபடுவதைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக இந்த அளவீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பிஎஸ்-4 வாகனங்களின் பயன்பாடு பெருமளவில் வழக்கில் இருந்தது. ஆனால், நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து பிஎஸ்6 தொழில்நுட்பங்களைக் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய சூழலில், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு 10 நாள்களுக்கு மட்டும் பிஎஸ்-4 வாகனங்களை விற்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அந்த அனுமதியை உச்சநீதிமன்றம் பின்னா் திரும்பப் பெற்றது.
இத்தகைய சூழலில், பிஎஸ்4 வாகனங்களை அதன் தயாரிப்பு நிறுவனங்களிடம் திருப்பி அளிக்குமாறு வாகன விற்பனையாளா்களுக்கு உத்தரவிடக் கோரி நிறுவனங்களின் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. விற்பனையாகாமல் உள்ள பிஎஸ்-4 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக அந்த சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பான விசாரணை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆா்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? எனினும், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பு வாதத்தைக் கருத்தில் கொள்கிறோம். பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வது தொடா்பாக உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அவற்றைப் பதிவு செய்யக் கூடாது‘ என்றனா்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.