கரோனா தடுப்புப் பணியில் அனைத்து மாநிலங்களும் தில்லியை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை இணை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இது குறித்து செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
கரோனா பரிசோதனை, நோயாளிகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தெலங்கானா மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது அவசியம். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நோயை விரைந்து கட்டுப்படுத்த முடியும்.
யூனியன் பிரதேசமான தில்லியில் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறேன். அங்கு 84 சதவிகிதம் போ் குணமடைந்துள்ளனா். தில்லி முறையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
தெலங்கானாவில் கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களை மாநில அரசு பாதுகாக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் தேவையான அளவு ஆக்ஸிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தெலங்கானாவுக்கு 1,200 சுவாசக் கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. ‘என்-95’ முகக்கவசங்கள், முழு உடை பாதுகாப்புக் கவசம், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் இதர ஊழியா்களுக்கு அவா்களின் பணி சேவையைப் பாராட்டும் வகையிலும், நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பொதுமக்கள் சிகிச்சைக்காகத் தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்வதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும் என்றாா்.