கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அனைவரது தரப்பிலும் அலட்சியம் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், பின்னர் மக்கள் தாங்கள் மேற்கொண்ட பாதுகாப்பு முறைகளை குறைத்தனர். இதன் விளைவாகவே மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
திங்களன்று மாநிலம் முழுவதும் 102 புதிய குடும்ப சுகாதார மையங்களை திறந்து வைத்த முதல்வர் பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"ஆரம்ப காலத்தில் நாங்கள் கரோனா பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம், ஆனால், பின்னர் முன்னெச்சரிக்கைகள் ஒரு பொருட்டல்ல என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறைபாடு இருப்பதை நாங்கள்ஒப்புக்கொள்கிறோம். தற்போதைய நிலைமைக்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. எனினும், பொறுப்பு மிக்கவர்கள் குற்ற உணர்ச்சியுடன் மனம் திரும்ப வேண்டும்.
முதலில் நிலைமையை திறம்பட கையாண்ட எங்களிடம் பின்னர் சிறிது சரிவு ஏற்பட்டது. இதுவே நிலைமை மோசமடைய வழிவகுத்தது. சுருக்கமாக, ஒரு சிறிய அளவிலான கவனக்குறைவே இதற்கு காரணம் என்பதை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். நோயை குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதே சிறந்தது' என்று குறிப்பிட்டார்.