புது தில்லி: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்ட சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு மின்தூக்கி வசதி கேட்க தில்லி வந்ததாகக் கூறியுள்ளார்.
பாஜகவில் தான் இணையவில்லை என்றும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே தில்லி வந்ததாகவும் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
புது தில்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்தப் பிறகு திமுக எம்எல்ஏ கு.க. செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக ஆயிரம் விளக்கு தொகுதியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு மின்தூக்கிகளை (லிஃப்ட்) கேட்பதற்காக பியூஷ் கோயலைப் பார்க்கவே தில்லி வந்தேன். முதல் முறை கேட்டபோது அனுமதி கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறை மின்தூக்கி வசதிக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதற்காகவே தில்லி வந்தேன். நட்டாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால், அவரிடம் அயோத்தி நிகழ்ச்சிக்கு வாழ்த்தையும் பாராட்டுகளையும் மோடிக்கு தெரிவித்துக் கொண்டேன். நட்டா அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் ராமேஸ்வரம் கோயில் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளை அயோத்திக்கு ஒப்பாக மேம்படுத்தவும் நட்டாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை ஸ்டாலின் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். திமுகவின் உள்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் மோடி அரசு எதைச் செய்தாலும் அதை விமரிசித்துக் கொண்டிருக்கும் ராகுலையும், காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணையவிருப்பதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்றும் கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.