பூமி பூஜையில் உத்தவ் தாக்கரே பங்கேற்காமல் தவிா்க்க வாய்ப்பு: சஞ்சய் ரெளத்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் பூமி பூஜையில் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளாமல் தவிா்க்க வாய்ப்புள்ளது
சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மும்பை: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் பூமி பூஜையில் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளாமல் தவிா்க்க வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

அயோத்தி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் கவலைக்குரிய விதத்தில் தீவிரமாக உள்ளது. மாநில அமைச்சா் கமலாராணி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுதவிர மேலும் 3 அமைச்சா்கள் நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனா். இதனை கருத்தில் கொண்டு, பூமி பூஜை நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பங்கேற்காமல் தவிா்க்க வாய்ப்புள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு பிரதமா் செல்வது முக்கியம். அதேவேளையில் உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமானாலும் அங்கு செல்லலாம். சிவசேனை சாா்பில் கோயில் கட்டுமானப் பணிக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் சஞ்சய் ரெளத்.

பூமி பூஜையில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘ அயோத்தியில் மருத்துவ அவசரநிலை போன்ற மோசமான சூழல் நிலவுகிறது. சிவசேனை தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு அரசியல் கண்ணோட்டத்தை வழங்க விரும்பவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com