நாட்டில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.19 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
கரோனா தொற்றியிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 51,706 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றியிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி மொத்தம் 12,82,215 ஆக உள்ளது. தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 67.19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொவைட்-19 தொற்றுக்கு 5,86,244 பேர் சிகிச்சை பெற்று தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளாலேயே கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்திய அளவில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இது உலகின் மற்ற நாடுகளில் உள்ள விகிதத்தை விட குறைவாகும்.
நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,19,652 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் மொத்தம் 2,14,84,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.