‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் குணமடைந்ததையடுத்து புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த 11 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சௌகான், இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.
61 வயதான சிவராஜ் சௌகான் கடந்த ஜூலை 25-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து முதல்வா் சௌகான் தனது சுட்டுரையில், ‘எனக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல்நலம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால் அதை மறைக்காமல் மருத்துவரை அணுகி உரிய வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.