காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கப்படுவதை வலியுறுத்தி கூட்டாக குரல் எழுப்புவோம் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"இன்று ஆகஸ்ட் 6-ம் தேதி. கடந்த ஒரு ஆண்டாக திறந்தவெளி சிறைச்சாலை போன்ற நிலையில் வாழும் 75 லட்ச காஷ்மீர் மக்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும், முறையாக சிந்திக்கும் குடிமக்களும் ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போமா?
மெஹபூபா முக்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் அனைவரும் கூட்டாக நமது குரலை எழுப்ப வேண்டும்.
இந்தியாவில் மனித உரிமைகள் வெட்கமின்றி மறுக்கப்படுவதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. சுதந்திரமான ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பெருமை நாளுக்குநாள் குறைந்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார் ப. சிதம்பரம்.