உலகளாவிய காணொலி சந்திப்பு செயலியான ஜூமைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது.
இண்டஸ் தொழில்முனைவோர் (TiE) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா இணைய தின நிகழ்வில் ஜூம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் எஸ்.யுவான் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
உலக அளவில் கரோனா பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் என மக்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. பொதுமுடக்கத்தால் நேரடியாக சந்திக்க முடியாத பலரும் இணையவழி சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இணைய வழி சந்திப்பிற்கு உதவும் செயலிகளின் வர்த்தகம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரபல ஜூம் செயலியின் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஜூம் செயலியைப் பொருத்தமட்டில் கடந்த மே மாத நிலவரப்படி உலக அளவில் 13.1 கோடி பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18.4 சதவிகித பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் ஜூம் செயலியானது பெங்களூரு நகரில் தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கி பணியாளர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.