கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அறிவித்து அமல்படுத்தி வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமையான இன்று பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தால் பொதுபோக்குவரத்து, அலுவலகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள் மற்றும் சுகாதார மையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பொதுமுடக்கம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன் ஜூலை 23,25 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் பின்பற்றப்பட்டது.மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா பாதிப்பால் ஆயிரத்து 954 பேர் பலியாகியுள்ளனர் என்பது குரிப்பிடத்தக்கது.