ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேர் ஜெய்ப்பூரிலிருந்து தனி விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ராஜஸ்தானில் வரும் 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேர் தனி விமானம் மூலம் குஜராத்திலுள்ள போர்பந்தருக்குச் சென்றுள்ளனர்.
இதுபற்றி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர்கள் குஜராத் புறப்பட்டனர். அங்கு சொகுசு விடுதியில் தங்கும் அவர்கள், சோம்நாத் கோயிலில் தரிசனம் மேற்கொள்ளவுள்ளனர். 12 பாஜக எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமை இரவு குஜராத்திலுள்ள ஆமதாபாத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு விடுதியில் தங்கியுள்ளனர்." என்றனர்.
போர்பந்தருக்குச் சென்ற 6 பாஜக எம்எல்ஏ-க்களுடன் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த பாஜக எம்எல்ஏ அசோக் லஹோதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சில பாஜக எம்எல்ஏ-க்கள் காவல் துறையினர் மூலம் துன்புறுத்தப்பட்டுள்ளனர். துன்புறுத்தலுக்கு ஆளான எம்எல்ஏ-க்கள் தாமாக விரும்பி யாத்திரைக்குச் சென்றுள்ளனர்." என்றார் அவர்.
விமான நிலைய அதிகாரிகளும் போர்பந்தருக்குச் சென்ற விமானத்தில் 6 பயணிகள் இருப்பதை உறுதி செய்தனர்.