புதுதில்லி: நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7 ஒரே நாளில் மட்டும் 5,98,778 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 5,98,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூலை மாதத்தில் மட்டும் 1,05,32,074 சோதனகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 7- ஆம் தேதி வரை மொத்தமாக 2,33,87,171 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது மேலும் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 61,537 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20,88,612 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 42,518 -ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நாட்டில் 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 14,27,006 பேர் வீடு திரும்பியுள்ளனர்.