அமராவதி: ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் சுவர்ணா பேலஸ் கரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு 30 கரோனா நோயாளிகள், 10 மருத்துவமனை ஊழியர்கள் என மொத்தம் 40 பேர் இருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் கரோனா மையத்தில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்கான ராசாயன பொருள்கள் பல இருந்ததால் தீ பயங்கரமாக மளமளவென்று பரவ தொடங்கியது.
அதனால் ஏற்பட்ட புகை காரணமாக நோயாளிகள், ஊழியர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
தீ விபத்தை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணிநேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கரோனா நோயாளிகள் 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விஜயவாடா காவல் ஆணையர் பி.சீனிவாசுலு கூறுகையில், அதிகாலை 5.09 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து காவலர்களும் தீயணைப்பு வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாலை 5.45 மணியளவில் தீ அணைக்கப்பட்டது."
"சுமார் 30 கரோனா நோயாளிகள் மற்றும் 10 மருத்துவமனை ஊழியர்கள் என மொத்தம் 40 பேர் உள்ளே இருந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணைக்கு பின்னரே, கராணம் தெரிய வரும்"என்று அவர் கூறினார்.
இருப்பினும், முதற்கட்ட அறிக்கையின்படி, தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று தோன்றுகிறது என்று கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தீ விபத்து அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ,விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கையில் விரைந்து மேற்கொண்டு காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதி அளித்து உயர்தர சிகிச்சைக்கு அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.