புதுதில்லி கல்சா கல்லூரி அருகே ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது மதுபோதையில் காரை ஓட்டிவந்த இளைஞர் மோதியதில் காவலர் ஒருவர் பலியானார்.
இது குறித்து துணை காவல் ஆணையர் (வடக்கு) மோனிகா பரத்வாஜ் கூறுகையில்,
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலைமை காவலர் வஜீர் சிங் (வயது 50) மற்றும் காவலர் அமித் ஆகிய இருவரும் கல்சா கல்லூரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தனது நண்பரை சந்தித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் துஷார் குப்தா (19). அவர் வேகமாக வந்து மோதியதில் ரோந்து வாகனம் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
ரோந்து வாகனத்தை ஓட்டி வந்த காவலர் அமித், மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாகனத்தில் சிக்கிக் கொண்ட வஜீர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வஜீர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், விபத்துக்கு காரணமான துஷார் மதுபோதையில் கார் ஓட்டியது பரிசோதனையில் தெரிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக கூறினார்.