கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக பாசில் ஃபரீத்திடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு நேற்றிரவு துபை சென்றடைந்தது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சாரித், ஸ்வப்னா சுரேஷ், பாசில் ஃபரீத் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் ஃபரீத் துபையில் உள்ளார். இதில் பாசில் ஃபரீத்திடம் விசாரணை நடத்த என்ஐஏ குழு துபை விரையும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், என்ஐஏ குழு நேற்றிரவு துபை சென்றடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையில் தொடர்புடைய மூத்த என்ஐஏ அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி தெரிவித்ததாவது:
"கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த என்ஐஏ குழு நேற்றிரவு துபை சென்றடைந்தது. இந்த வழக்கில் கேரள அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டவுள்ளது. முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் ஃபரீத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள் காவலில் உள்ள மேலும் இருவரிடமும் என்ஐஏ விசாரணை மேற்கொள்ளவுள்ளது." என்றார் அவர்.
இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ இதுவரை 12 பேரை கைது செய்துள்ளது.