விஜயவாடா: ஓங்கோல் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளியின் உடலை நாய்கள் கடித்துத் தின்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளியின் உடலை நாய்கள் கடித்துத் தின்ற சம்பவம் மனிதத்தன்மையற்ற செயல் என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
இரண்டு நாள்களுக்கு முன்பு, ஓங்கோல் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா நோயாளியின் உடலை மருத்துவமனை வெளி வளாகத்தில் கிடத்தியிருந்தது, மனிதநேயமற்ற, பரிதாபகரமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா நோயாளியின் உடலை நாய்கள் கடித்துக் குதறியதைப் பார்த்தும் யாரும் எதுவும் செய்யவில்லை, அதுபற்றி அங்கிருந்த யாருமே கவலைப்படவில்லை என்பது கவலைதருவதாக உள்ளதாகவும் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் போன்ற பேரிடர் நேரத்திலும் கூட, ஆந்திர மாநில அரசின் கவனக்குறைவானப் போக்கு நீடித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.