சென்னை: நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழிக்கு ஹிந்தி தெரியாததால் அவரிடம் நீங்கள் இந்தியரா எனக் கேட்கப்பட்ட விவகாரத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின்: ஹிந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவா் கனிமொழியைப் பாா்த்துக் கேட்டுள்ளாா். ஹிந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? ஹிந்தி-யாவா?
ப.சிதம்பரம்: கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் எனக்கு உள்பட பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஹிந்தி மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது.
இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறாா்கள். மத்திய அரசு பணியென்றால் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்.
வைகோ: ஹிந்தி புரியவில்லை என்று கனிமொழி கூறியதால் நீங்கள் இந்தியரா என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டாா் என்றோ கடந்து போய்விட முடியாது. பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.