கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: ஆம்புலன்ஸில் பிரசவம்
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கரோனா உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர ஊர்தி வாகனத்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் உப்பாலா பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று (புதன் கிழமை) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பின்னர் கன்னூர் மருத்துவக் கல்லூரிக்கு அவர் அனுப்பப்பட்டார்.
அவசர ஊர்தி வாகனத்தில் செல்லும்போது கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை மோசமடைந்ததால், அவசர ஊர்தி வாகனத்திலேயே பிரசவம் பார்க்க மருத்துவ பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவசர ஊர்தி வாகனத்திலேயே கரோனா பாதுகாப்பு உபகரணங்களுடன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் நடைபெற்றது. பின்னர் தாயும், சேயும் நலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே இக்கட்டான சூழலில் சாதூர்யமாக செயல்பட்டு வெற்றிகரமாக பிரசவம் பார்த்த அவசர ஊர்தி மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா மருத்துவ பணியாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.