நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா பேரிடர் காரணமாக வளைகுடா நாடுகளில் இந்திய மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், 'நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது?' என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வின் இன்றைய விசாரணையில், தேசிய தேர்வு முகமை இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, 'நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது சாத்தியமல்ல. இது பல குழப்பங்களை, குளறுபடிகளை ஏற்படுத்தும். அதேபோன்று கூடுதல் மையங்களை ஏற்படுத்துவது சாத்தியமல்ல. போதிய கால அவகாசத்துடனே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வை ஒத்திவைப்பதும் சாத்தியமாகாது. எனவே, திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, வளைகுடா நாடுகளில் உள்ள தேர்வர்கள் பலர் கேரளத்தைச் சேர்ந்தவர். மேலும், இதுதொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.