ராஜஸ்தானில் இருவேறு சம்பவங்களில் சோத்ரா ஆற்றில் மூழ்கி இரண்டு பேர் பலியானார்கள்.
ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் பருவ மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டோங்க் மாவட்டத்தில் பாயும் சோத்ரா ஆற்றில் வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரண்டு பேர் பைக் ஒன்றில் ஆற்றின் பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த பைக் ஆற்றில் வழுக்கி விழுந்தது. இதில் பைக்கில் சென்ற இருவரும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்.
மாயமானவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மற்றொரு சம்பவத்தில், நபர் ஒருவர் தனது வயலில் இருந்து திரும்பியபோது அவரது ஆடு ஒன்று ஆற்றில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்டை மீட்க அவர் ஆற்று நீரில் குதித்தார். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த அவரது மகனும் தனது தந்தையையும் ஆட்டையும் மீட்க குதித்தார். இதில் தந்தை காப்பாற்றப்பட்ட போதிலும், அவரது மகனை காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், "சனிக்கிழமை மாலை நான்கு பேர் நிரம்பி வழியும் சோத்ரா ஆற்றில் மூழ்கிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கிராமவாசிகள் இருவரை மீட்ட நிலையிலும், மற்ற இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்றனர்.