மாபெரும் இசைக் கலைஞரான ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 90. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவருடைய மகள் துர்கா ஜஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள நியு ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த ஜஸ்ராஜ்.
சங்கீத மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ், நியு ஜெர்ஸியிலுள்ள அவருடைய இல்லத்தில் அமெரிக்க நேரப்படி காலை 5.15 மணிக்கு மாரடைப்பு காரணமாக மறைந்தார் என்று அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் பிறந்தவரான பண்டிட் ஜஸ்ராஜ், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என நாட்டின் மிக உயரிய விருதுகளைப் பெற்றவர்.
எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்தவர் ஜஸ்ராஜ். ஏராளமான கச்சேரிகளை உலகெங்கும் நிகழ்த்தியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணற்ற ஆல்பங்களாக வெளிவந்துள்ளன.
இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இசையும் கற்றுக் கொடுத்தார்.
ஜஸ்ராஜின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட தலைவர்களும் எண்ணற்ற கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.