லக்னௌ: ஏழைப் பெண்ணின் இதய சிகிச்சைக்கு தக்க சமயத்தில் உதவிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல் பாராட்டுப் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கேம்பியர்கஞ்ச் தாலுகாவில் உள்ளது மச்லிகான் கிராமம். இங்கு வசித்து வரும் ஏழை விவசாயியான ராகேஷ் சந்திர மிஸ்ராவின் மகள் மதுலிகா மிஸ்ரா. தற்போது பி.எட். பயின்று வரும் மதுலிகாவிற்கு இதய வால்வில் பிரச்சினை உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதனை மாற்ற வேண்டுமானால் பெரும்பணம் செலவாகும். இவர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவலாகப் பகிரப்பட்டது. இந்த தகவல் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காதுகளையும் எட்டியுள்ளது.
இதையடுத்து அவரது கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் யோகி, மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த மேதாந்தா மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில், முதல்வர் தொகுப்பு நிதியில் இருந்து மதுலிகாவின் சிகிச்சைக்கு ரூ. 9.90 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தாவு பிறப்பித்துள்ளார். அத்துடன் மதுலிகா விரைவில் குணம் பெறவும் ராகேஷ் சந்திர மிஸ்ராவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.