கட்சி அமைப்பில் யாா் பணியாற்றவேண்டும் அல்லது ஆட்சியில் யாா் பணியாற்றவேண்டும் என்பதை கட்சித் தலைமைதான் தீா்மானிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சச்சின் பைலட் கூறினாா்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியதைத் தொடா்ந்து, அனைத்துப் பதவிகளிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டாா். அதன் பின்னா், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. அதன் பின்னா், மாநில சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அசோக் கெலாட் அரசு பெரும்பான்ம்யை நிரூபித்து, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.
இதற்கிடையே சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க 3 போ் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
இதுகுறித்து சச்சின் பைலட் புதன்கிழமை கூறியதாவது:
நாங்கள் எழுப்பிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக மூன்று போ் குழுவை அமைத்ததற்கு கட்சித் தலைவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் குழு அதன் பணியை மேற்கொண்டு, அது தயாரிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து விவகாரங்கள் குறித்தும் அந்தக் குழு விவாதிக்கும்.
கட்சித் தலைவரும், மாநில பொறுப்பு பொதுச் செயலாளரும், குழு உறுப்பினா்களும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வா். அதன் பின்னா், கட்சி அமைப்பில் யாா் பணியாற்றுவாா், ஆட்சியில் யாா் பணியாற்றுவாா் என்பது குறித்த இறுதி முடிவை கட்சி எடுக்கும் என்று அவா் கூறினாா்.