மத்திய வளங்கள், ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (தேரி) பேட்டரி ஸ்டோரேஜ் சிஸ்டம் (மின்கலம்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பிஎச்இஎல் நிறுவனம் பெற்றுள்ளது. வணிக ரீதியில் மின்கலம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பாரத மிகுமின் நிறுவனம் (பிஎச்இஎல்) பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பலத்த போட்டிகளுக்கு இடையே, தேரி நிறுவனத்துக்கு மின்கலம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி, தில்லி தேசியத் தலைநகா் பகுதியில் 410 கிலோ வாட் திறனுள்ள மின்கலம் அமைப்பதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மின்கலம் வடிவமைப்பது, சோதனை செய்வது, 3 வெவ்வேறு இடங்களில் பொருத்தி இயங்க வைப்பது, அத்துடன் 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு ஆகிய பணிகளை பெல் நிறுவனம் மேற்கொள்ளும். லித்தியம்-அயன், காரீயம்-காா்பன், ஃப்ளோ பேட்டரி ஆகிய மூன்று வகை தொழில்நுட்பங்களுடன் இந்த மின்கலங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு, இந்த திட்டப் பணிகளை நிறைவேற்றவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.